Wednesday, September 30, 2015

கொசுறு..


என்னதான் நூத்துக்கணக்கில பணத்தைக் கொடுத்து கறிகாய் வாங்கினாலும், கடேசியா கொசுறு-ன்னு ஒரு கொத்து கறிவேப்பிலை-கொத்துமல்லித் தழை வாங்கறது ஒரு தனி சந்தோஷம்தான்..நீங்க என்ன சொல்றீங்க?? "...க்க்க்கும், இதெல்லாம் ஒரு சந்தோஷம்..இதப்பத்தி படிக்க வேற வேணுமா?" என்று கேட்பவர்கள், அப்படியே இந்த ப்ரவுஸர் விண்டோவை சாத்திவிட்டு உருப்படியான வேறு வேலைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ;) 
.........
-------------
***************
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
############
@@@@@@@@@@@
~~~~~~~~
--------------------
.........................................................................
......................................
................
...---
+++++++++++++
--------
..........
..
..
.......
..
என்னது...இன்னும் படிச்சிட்டிருக்கீங்களா?? அப்பச்சரி..ஸ்டார்ட் மீசிக்!!! :))))) 


திடீருன்னு ஒரு ஞாயித்துக்கிழம காலங்காத்தால எந்திரிச்சு காப்பி குடிச்சவுடனே மண்டைக்குள்ள ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பளீஈஈஈர்-நு ஒரு பல்ப் எரியும்..இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இல்லன்னா பரவால்ல, இன்னும் நிறைய ஞாயித்துக்கிழம வரும். நல்ல காப்பியாக் குடிச்சுப்போட்டு வெயிட் பண்ணுங்க. இப்படியான ஒரு ஞாயித்துக்கிழமயில்  "ஃபார்மர்ஸ் மார்க்கட்" போலாம் என்று பல்ப் எரிய, உடனே குட்டீஸை எல்லாம் தூக்கி காரில போட்டுகிட்டு எட்டேகால் மணிக்கெல்லாம் மார்க்கெட் போயிட்டோம். அங்கே போனா இத விட இன்னுங்கொஞ்சம் பெரிய பல்பு எங்களுக்குக் காத்திருந்தது.
;)

மார்க்கட் ஆல்மோஸ்ட் காலி...சிலர் அப்பத்தான் வந்து கடைகளுக்குப் பந்தக்கால் நட்டுகிட்டு இருந்தாங்க..என்னங்க டைமிங்? அப்படின்னு ஒரு கடைக்காரர் கிட்ட கேட்டா இப்படியும் சில தூங்காமாறிகள்-ங்கற லுக்கை குடுத்துப்புட்டு 10-2 அப்படின்னு பதிலச் சொன்னாரு.   வந்தது வந்தாச்சு...சும்மா (காலியாக் கிடக்கிற இடத்தை) ஒரு ரவுண்டு வரலாமேன்னு போனம். ஒரு காய்கறிக்கடை ஆல்மோஸ்ட் எல்லாக் காயும் எடுத்து வைச்சிருந்தாங்க..எல்லாம் நமக்கு வேண்டிய காய்கள்..அள்ளிகிட்டாச்சு..
கோங்குரா கீரை, வெண்டைக்கா, பச்சைக் கடலைக்காய், பச்சைக் கத்தரி, ரெகுலர் கத்தரி, பேபி ஆனியன் (அதென்ன பேபின்னு தெரீலைங்க..பேரு ஃபேன்ஸியா இருந்ததால 5 எடுத்துகிட்டேன்...ஹிஹி..), சுரைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் இப்படி நமக்குத் தேவையான காய்கள் எல்லாமே ஒரே கடைல கிடைச்சது. கூடவே தர்பூசணி, கேண்டலூப் பழங்களும் அங்கயே வாங்கிகிட்டோம். மொத போணிங்கறதால தர்பூசணி கட் பண்ணி எங்க 3 பேருக்கும் (ஜீனோ டஸிண்ட் ஆல்வேஸ் ஈட் வாட்டர்மெலன் யு ஸி...சில அரிய சந்தர்ப்பங்களில அய்யா அதுவும் சாப்பிடுவாராக்கும்!!) குடுத்தாங்க. :)  மற்ற பழ வகைகளும் பக்கத்துக் கடைல வாங்கிட்டு கம்பி நீட்டிட்டோம். 
வெகுநாட்கள் கழிச்சு கிடைச்ச பச்சைக் கடலய கழுவி, உப்பு சேர்த்து,
குக்கரில வேகவைத்து....ஆவலோடு சாப்பிட உரிச்சா...
கடலை ஒண்ணொண்ணும் சும்மா காம்ப்ளான் குடிச்ச மாதிரி புஷ்டியா, பெருசா இருந்தது. சுவையும் நம்ம ஊர் கடலை மாதிரி அவ்ளோ சுவை இல்லை..பட் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி மனசைத் தேத்திகிட்டுச் சாப்பிட்டாச்சு.
அடுத்த முறை போனபோது பூசணிக்காய் வாங்கியாந்தேன்..நல்ல சுவை! இந்தியன் ஸ்டோரில் வாங்கும் காயை விட சீக்கிரமா வெந்துவிட்டது, சுவையும் அருமை!
இவை சந்தை அருகே எடுத்த படங்கள்..வானமும் மலைத்தொடரும் புல்வெளியுமாக கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களாக இருந்ததால் இங்கே சேர்த்துட்டேன்.
இப்படியாக சிலபல வாரங்கள் போனோம்..அந்தக் காய்க்கடைக்காரங்க நல்ல நட்பாகிட்டாங்க. "பாப்பா தூங்கிட்டு இருக்காளா? நிம்மதியா ஷாப்பிங் பண்ணுங்க....
உங்க பப்பி(!!) இன்னிக்கு வரலியா?
எப்ப ஸ்பினாச் கீரை கொண்டுவருவீங்க?
பாகற்காய் கொடிய பிஞ்சோட கட் பண்ணி வைச்சிருக்கீங்களே..இதை என்ன செய்து சாப்பிடுவாங்க? இது என்ன இலைதழை? ..."
அப்படினெல்லாம் அரட்டையடிச்சுகிட்டே காய்-கனிகள் வாங்கி வருவது வழக்கமானது.

கடந்த வாரம் போனபோது 2 அடி வளர்ந்த கொத்துமல்லி மரத்தை(!?!) கட்டுக்கட்டா விற்பனைக்கு வைச்சிருந்தாங்க..இது ஏன் இவ்ளோ பெரிசு இருக்கு? நல்ல மணம் இருக்குமா என்றெல்லாம் கேட்டாலும் அதை வாங்க என்னவோ தயக்கம். மத்த காய்கள் எல்லாம் வாங்கிட்டு, எடை போடப் போட அவர் குத்துமதிப்பாக கணக்குப் போட்டு $14 என்றார். [நிச்சயம் அதை விட அதிக மதிப்பில்தான் காய்கள் எடுத்திருந்தேன்] காயெல்லாம் பையில் போடப்போட, டக்கென்று ரெண்டு துண்டு இஞ்சியையும் ஒரு கட்டு கொத்துமல்லியையும் பையில் போட்டுவிட்டார். கொசுறுங்கோ...கொசுறு!! :)))
வீட்டுக்கு வந்து மரக்கட்டை எடுத்து படமும் எடுத்துவிட்டு, ஒரு சந்தேகத்துடனே இலைகளை எடுத்தேன்..ஆச்சரியமூட்டும் வகையில் நல்ல மணமாகவும் சுவையுடனும் இருந்தது. சும்மா கொடுத்தது சுவையாகவும் இருக்கவும்..கேட்கவும் வேண்டுமா? பலநாள் கழித்து இங்ஙன ஒரு மொக்கையத் தேத்தியாச்சு. ;)

பி.கு. வரும் அக்டோபர் மாதம் ஃபார்மர்ஸ் மார்க்கட் லேது...கால்பந்து விலையாட்டுக்காக மைதானத்தை உபயோகிக்கப் போறாங்களாம்..இனி நவம்பர்ல மறுபடியும் சந்தைக்குப் போலாம். நீங்களும் வாறீங்களா? :)


Thursday, September 17, 2015

இனிப்பு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/2கிலோ
வெல்லம் - 1/2கப் (இனிப்புக்கேற்ப)
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்-2
தேங்காய்த்துருவல் - 2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துண்டுகள் -2டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்

செய்முறை
புழுங்கலரிசியைக் 2-3 முறை களைந்து 3 மணி நேரங்கள் ஊறவிடவும்.
ஊறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் கொஞ்சமாக நீர் சேர்த்து குறைந்த தீயில் கரையவிடவும்.
 வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மாவைச் சேர்த்து கிளறவும்.
 மாவு கெட்டியாகி வரும்போது தேங்காய்த்துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து கிளறவும்.
கடைசியாக 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறவும். மாவு கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்போது இறக்கி வைத்து ஈரத்துணியால் மூடி ஆறவைக்கவும்.
இட்லிப்பானையில் தண்ணீர் சூடாக்கவும். மாவு ஆறியதும் சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் அழுத்தி இட்லித்தட்டில் வைத்து வேகவைக்கவும்.
கொழுக்கட்டைகள் 5 நிமிடத்தில் வெந்துவிடும். (நான் ஆறு ஆறு கொழுக்கட்டைகளாகத்தான் வேகவைத்தேன், அதிகம் வைத்தால் அதற்கேற்ப நேரத்தை கவனித்து வேகவிடவும்.)
சுவையான சாஃப்டான இனிப்புக் கொழுக்கட்டைகள் தயார்.
பிள்ளையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 
:) 

LinkWithin

Related Posts with Thumbnails