Friday, May 28, 2010

நத்தையாரே,நத்தையாரே எங்கே போறீங்க?

எல்லாரும் பொழுது போகாமல் அழகா போட்டோஸ் போடுறாங்க..எனக்கும் பொழுது போகல..எங்க அபார்ட்மென்ட் முழுவதும் சுதந்திரமாய்த் திரியும் ஆட்கள் இந்த நத்தைகள் தான்..பாத் வே-யில் அங்கங்கே யார் காலிலாவது மிதிபட்டு சிதிலப் பட்டு கிடக்கும் நத்தை ஓடுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். இருக்கும் ஓரடி தடத்தை கடக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வதால், எதிர்பாராமல் யாரேனும் மிதித்து விடுகிறார்கள்..

இந்த நத்தையார் வெகு நாளாய் எங்க வீட்டுக்கு வெளியே இருந்த சுவற்றிலேயே தான் ஒட்டிக் கொண்டிருந்தார்..சுவரோடு ஒட்டிய ஓட்டில் ஒரு அசைவும் இருக்காது..திடீரென்று ஒன் ஃபைன் மார்னிங் என்னவர் ஆபீஸ் கிளம்பும்போது பார்க்கிறேன்..சுவரிலிருந்து இறங்கி வெகு வேகமாக, வீட்டெதிரில் இருக்கும் செடிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
சரி, நத்தையைக் கொஞ்சம் தொடர்வோம் என்று எடுத்த படங்கள் தான் இவை.
கிட்டத்தட்ட ஓரடி தூரம் கடந்துவிட்டார்..

ம்ம்..செடிக்குப் போவோமா இல்லை டைரக்ஷனை கொஞ்சம் மாற்றிகொள்வோமா? என்று யோசித்து திசை மாற ஆரம்பித்தார்..

வேணாம்..இது இன்னும் தூரம்..செடிக்கே போய்விடுவோம் என்று நினைத்தார் போல..ஒரிஜினல் பாதைக்கே திரும்பி நகர ஆரம்பித்துவிட்டார். நத்தைகள் நகரும்போது இது போன்ற தாரைகளை விட்டுச் செல்கின்றன..சிறிது நேரத்தில் இந்த தடங்கள் வெள்ளை வெளேரென்று மின்னும்..அந்த தடத்தை வைத்தே இவ்வழியில் தனது வீட்டை சுமந்துகொண்டு ஒருவர் சென்றிருக்கிறார் என்று கண்டுகொள்ளலாம்.

அப்பாடி, மண்ணை நெருங்கி விட்டார்..

பை,பை நத்தையாரே!


கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் கடந்து சென்ற பாதை.. ஒரு மூன்றடி இருக்கும்!!

அன்று போனவர் திரும்பி வரவே இல்லை..சின்ன நாற்றுகளை நத்தையார் சுவைத்து விடுவார்,அதற்கு மருந்து வாங்கிப் போடுங்கள் என்று எங்கள் இலவச அட்வைஸ்:) எக்ஸ்பர்ட் சொன்னார்..ஆனால் நான் அதை செய்யவே இல்லை! ;)

நத்தையின் கூடைப் பார்க்கையில் அழகாய் இருந்தது..ஆனால் நகர்ந்து செல்லும் நத்தையைக் கவனித்ததில், அதன் ட்ரான்ஸ்பரன்ட்-டான உருவம் மண்புழுவை ஞாபகப் படுத்துது..எனக்கும் மண்புழுவிற்கும் ஏழாம் பொருத்தம்! சமீபத்தில் ஒரு முறை மண்ணைக் கிளறும்போது, ஒரு மண்புழு! கையில் இருந்த கொத்தும் கரண்டிய மண்ணுல போட்டுட்டு,ஒரே ஓட்டமாய் வீட்டுக்குள் ஓடிவிட்டேன்..இத்தனைக்கும்,காலில் ஷூ..கைகளில் க்ளவுஸ்!!

சரி, என்னோடு சேர்ந்து நீங்களும் வெகு நேரம் வெட்டி பொழுது போக்கியாச்சு..இங்கே இந்த வாரம் லாங் வீக் எண்ட்..மூன்று நாள் லீவு! ஸோ, அடுத்த வாரம் சந்திப்போம். நத்தையையே பார்த்து போரடித்த கண்களுக்கு குளிர்ச்சியாய் இந்தப் பூக்களையும் பார்த்துட்டு போங்க! :)


பின் குறிப்பு: நத்தை பின்னே நானும் ரெண்டு மணி நேரம் நகர்ந்தேனோ என்று ஐயப்படாதீர்கள்..அப்பப்போ வெளியே சென்று எடுத்த போட்டோஸ் தான் இவை..மத்தபடி நாங்க வெட்டியா எல்லாம் இல்லையாக்கும்! :))))

Thursday, May 27, 2010

பரிசு

வீட் ப்ரெட் ஹல்வால நான் செய்த ஒரு சின்ன குளறுபடியை கரெக்ட்டா கண்டுபிடித்த ப்ரியாவுக்கு இந்த ஸ்பெஷல் சாக்லட் கேக்!
ஆர்வமுடன் பங்கேற்ற தோழமைகள் ஆசியாக்கா,மேனகா,மிஸ்.சிட்சாட்,நிது,கீதா,வானதி,வேணி,இமா இவர்களுக்கு இந்த மார்பிள் கேக்!
ஊக்கம் தரும் பின்னூட்டம் தரும் அனைவருக்கும் என் நன்றிகள்!

இந்த லெமன் ஜூஸ் யாருக்குன்னு சொல்லணுமா என்ன? :)
'லெமன் ஜூஸ்' புகழ் ஜெய்லானி அண்ணா,என்னைப் பின்தொடர்வதற்கு நன்றி! :) :) :)

Tuesday, May 25, 2010

வீட் ப்ரெட் ஹல்வா

ஜலீலாக்கா செய்த ப்ரெட் ஹல்வா பார்த்ததுல இருந்தே சீக்கிரம் செய்து பார்த்துடணும்னு நினைச்சுட்டே இருந்தேன்..எங்க வீட்டுல ப்ரெட் வாங்கறதே அபூர்வம்..சில மாதங்கள்/வாரங்களுக்கொருமுறை திடீர்னு என்னவருக்கு டயட் கான்ஷியஸ் வந்து
ஹோல் கிரெயின் ப்ரெட்,இல்லைன்னா ஹோல் வீட் ப்ரெட் இதுல(இது ரெண்டு மட்டும்தான் ..நோ வொயிட் ப்ரெட்!) வாங்கிட்டு வருவார்..வாங்கி வந்த ஒரு நாள் மீறிப் போனா ரெண்டு (ஆல்டர்நேட்டிவ் டே) நாள் சான்ட்விச் பண்ணி சாப்பிடுவார்..அப்புறம் அந்த ப்ரெட் அப்படியே பரிதாபமா கிடக்கும். இந்த முறையும் அதே போல ஒரு ப்ரெட் வீட்டுல தூங்கிட்டு இருந்தது.

ஜலீலாக்கா வொயிட் ப்ரெட்ல பண்ணிருந்தாங்க..அதான் யோசிச்சுட்டே இருந்தேன்..அப்ப ஒருநாள் நிதுபாலா மிக்ஸட் ப்ரூட்ஸ் அன்ட் ப்ரெட் ஹல்வா
போஸ்ட் பண்ணிருந்தாங்க..அதைப் பார்த்ததும், ஆஹா.. நம்ம வீட்டு ப்ரெட்க்கும் விடிவு காலம் பொறந்துடுச்சுன்னு மண்டைக்குள்ள 'பல்ப்' எரிஞ்சது!
(பல்ப்-கர்ட்டஸி : சந்தனா ) :)))

இவங்க ரெண்டு பேர் யூஸ் பண்ணிருந்த சாமான்கள் எல்லாம் கைவசம் இல்லை.(லைக் கண்டென்ஸ்ட் மில்க், பழங்கள்)..சரி,இருக்கறத வச்சு ஒப்பேத்திடலாம்னு ஒரு தைரியத்துல ஆரம்பிச்சுட்டேன்..இதோ தேவையான(??!) பொருட்கள்..

அஞ்சு ஸ்லைஸ் வீட் பிரெட்ல லைட்டா நெய் தெளித்து, ப்ரீ ஹீட் பண்ணின அவன்ல ஒரு பத்து நிமிஷம் பேக் பண்ணேன்..அப்புறம் ப்ரெட்-ஐத் திருப்பி வைச்சு ஒரு அஞ்சு நிமிஷம் வைச்சேன்.

அதுக்குள்ளே,பேக் பண்ணனுமா,ப்ராயில் பண்ணனுமான்னு வேற ஒரு டவுட்டு..பேக் பண்ணினாலே நல்லா மொறு-மொறுன்னு ஆயிடுச்சு!:))

இப்ப அடுத்த ஸ்டெப்பு..கடாய்ல கொஞ்சம் நெய் காயவைச்சு மேல தட்டுல இருந்தத எல்லாம்(!!) கொட்டிட்டேன்..பொன்னிறமா வறுபட்ட பின்னால பார்த்தா...(****நீங்க மேல படிங்க..கடைசில சொல்லறேன்)
வறுத்த எல்லாத்தையும் எடுத்து தனியா வைச்சுட்டு,அதே கடாய்ல ரெண்டு டம்ளர் பாலை ஊத்தி கொதிக்க வைச்சு, உடைச்சு வைச்ச ப்ரெட்-ஐ சேர்த்தேன்.

அய்யகோ..ப்ரெட்-க்கு என்ன ஒரு தாகம்ங்கறீங்க? பத்து செகண்ட்ல பால் எல்லாத்தையும் உறிஞ்சுடுச்சு..இன்னும் கொஞ்சம் ஊத்தலாமான்னு யோசிக்க(பாலை காய வைக்கணுமில்ல!) டைம் இல்லை..சரி சர்க்கரை சேர்த்தா கொஞ்சம் இளகுமேன்னு முக்கால் கப் சர்க்கரைய சேர்த்தேன்.
கொஞ்சம் ஹல்வா பார்ம் வந்துடுச்சு..அப்புறம் ஒரு ரெண்டு-மூணு ஸ்பூன் நெய் ஊத்தி நல்லா கிளறினேன்..கடைசியா, வறுத்து வைத்த முந்திரி-பாதாம்-திராட்சை எல்லாம் சேர்த்து கலந்தா..

சூப்பர் ப்ரெட் ஹல்வா ரெடி!

ஹல்வா செய்து வைச்சுட்டேன்.டேஸ்ட் பண்ணலை..இவர் இனிப்பே சாப்பிட மாட்டாரு..இவ்வளவு ஹல்வாவையும் என்ன செய்யப் போறோமோன்னு நினைத்துட்டே இருந்தேன்.ஈவினிங் ஆபீஸ்ல இருந்து வந்ததும், ஒரு பவுல்-ல குடுத்துட்டு,ரிசல்ட்டுக்காக திகிலோட வெயிட் பண்ணினேன். ஒரு ஸ்பூன் சாப்ப்ட்டதுமே,'வாவ்..சூப்பர் ஸ்வீட்! நல்லா இருக்கு'ன்னுட்டாரு..அதுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியாச்சு! நானும் சாப்ட்டுப் பார்த்தேன்..சூப்பர் டேஸ்ட்!

இருங்க,இன்னும் மொக்கை முடியல..நாம தான் சூப்பர் குக்-கா ஸ்வீட் செஞ்சு அசத்திட்டமில்ல(நன்றி ஜலீலாக்கா& நிது) இனி கொஞ்சம் கெத்து காட்ட வேண்டியதுதானே?:) :)

"இது என்ன ஸ்வீட்னு சொல்லுங்க பார்ப்போம்..மூணு சான்ஸ் தான் குடுப்பேன்..அதுக்குள்ளே கண்டு புடிக்கணும்"-னு இவர்கிட்ட கேட்டேன்..என்னென்னமோ சொல்லிப் பாத்தாரு, பாவம்! ஆனா ப்ரெட் ஞாபகமே வரல...போனா போகட்டும்னு வீட் ப்ரெட் ஹல்வான்னு சொன்னா..நம்பவே முடியல அவருக்கு! பிரெண்ட் வீட்டுக்கும் கொண்டு போனோம்..அவங்களுக்கும் இது ப்ரெட் ஹல்வா-ன்னு கண்டுபுடிக்கவே முடியல..:)

பிரிட்ஜ்ல வைச்சா ஒரு வாரம் வரை நல்லா இருந்தது..அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்கறீங்களா? ஒண்ணும் ஆகலை....ஹல்வா தீர்ந்துடுச்சு.ஹி,ஹி!

****கடைசில சொல்லறேன்னு ஒரு இடத்தில சொல்லிருக்கேன்..என்ன ஆச்சுன்னா,ஏலக்காயை பொடித்து போடறதுக்கு பதிலா நெய்ல 'பொறித்து' போட்டுட்டேன். :)

Sunday, May 23, 2010

பச்சைப்பயறு-கீரை கடைசல்

எங்க வீட்டுப்பக்கம் "என்ன சமையல்?"ங்கற கேள்விக்கு, 'பருப்பு கடைஞ்சிருக்கேன்..
பச்சைப்பயறு/கொள்ளு/தட்டைப்பயறு கடைஞ்சிருக்கேன்..பருப்புக்குள்ள கீரை போட்டு கடைஞ்சிருக்கேன்' இது போன்ற பதில்கள் ரொம்ப சாதாரணமா கேட்கலாம்.
இந்த பருப்பு கடையறதில ரெண்டு வகை இருக்குங்க..

பச்சை செலவு
பருப்பு அல்லது தானியத்தோடு கூடவே வெங்காயம்,மிளகாய்,தக்காளி,சீரகம்,கொத்துமல்லி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து கடைவதுக்கு பேருதான் பச்சை செலவு போட்டு கடையறது..
மிளகாய் வேகவைத்து கொட்டி
பருப்பை தனியா வேக வைத்துக்கொண்டு மற்ற பொருட்களை எண்ணெயில் வதக்கி வேகவைத்த பருப்போடு சேர்த்து கடையரதுக்கு 'மொளகா வேவிச்சுக் கொட்டி கடையறது'ன்னு சொல்லுவாங்க.

வெறும் பருப்பு வகைகளை மட்டும் கடைவதோடு இல்லாமல் அந்தந்த நேரத்தில் கிடைக்கும் முளைக்கீரை,தண்டுக்கீரை,முருங்கைக் கீரை இப்படி கீரைகளையும் சேர்த்துக் கடைவதும் உண்டு. பச்சைப்பயறுடன் ஸ்பினாச் சேர்த்து, மொளகா வேவிச்சுக் கொட்டி:) கடைந்ததுதான் இது..

தேவையான பொருட்கள்
பச்சைப் பயறு -1/4கப்
ஸ்பினாச்-1/2கட்டு
தக்காளி-1
சின்ன வெங்காயம்- 10
பச்சை மிளகாய்-4 (அ)காரத்துக்கேற்ப
சீரகம்-1/2ஸ்பூன்
கொத்துமல்லி விதை-3/4ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை

பச்சைப்பையறை வாசம் வரும் வரை வறுத்து, மஞ்சள்தூள், சில துளிகள் எண்ணெய் இவற்றுடன் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
கீரையைக் கழுவி, இலைகளை மட்டும் நறுக்கிக் கொள்ளவும்.(தண்டுகள் இளசாக இருந்தால் தண்டுடன் சேர்க்கலாம்..இல்லையெனில் இலைகள் மட்டும் சேர்க்கவும்)
வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, சீரகம்,கொத்துமல்லி தாளித்து,வெங்காயம்,மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்கி, அரை டம்ளர் நீர் ஊற்றி வேக விடவும்.
கீரை வெந்ததும் வேக வைத்த பச்சைப்பையறை சேர்த்து ஒரு கொதி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, தேவையான உப்பு சேர்த்து மத்தால் கடையவும் (அ)கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
சத்தான பச்சைப்பயறு-ஸ்பினாச் கடைசல் தயார்..சுடு சாதம்-நெய்-மோர்மிளகாயுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.

இதேபோல துவரம்பருப்புடனும் ஸ்பினாச் சேர்த்து கடையலாம்.

Thursday, May 20, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்..

வீட்டில் கொஞ்சம் செடிகள் வளர்க்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை.. இப்ப கொஞ்சூண்டு இடம் கிடைத்திருக்கு..அதிலே என் கைவண்ணத்தை காட்ட ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.

இப்படி இருந்த இடத்தை..

கொத்தி,கிளறி அகப்பட்ட கற்கள்,ஆணி,சிமென்ட் கட்டி, நிறைய வேர்கள் இப்படி எல்லாவற்றையும் அகற்றி..
ஒரு மூட்டை கம்போஸ்ட் வாங்கிவந்து கொட்டி..

உரம் ஒரு பேக்கட் கொட்டி கலந்து விட்டு..

தண்ணீர் விட்டு ஒரு நாள் ஊற விட்டேன்..வெந்தயக்கீரை,மிளகாய்,கொத்துமல்லி எல்லாம் முளைக்க வைக்கலாம் என்ற ஆர்வக் கோளாறில்..

கொத்துமல்லியை ரோலிங் பின்னால் நுணுக்கி,வெந்தயத்தை முதல் நாளிரவே ஊறவைத்து..

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் நர்சரியில் இருந்து வாங்கி வந்த செடிகளை மண்ணில் நட்டுவிட்டு..அந்த பிளாஸ்டிக் கண்டெய்னரில் கொஞ்சம் மண் நிரப்பி..

வெந்தயம்,மிளகாய், கொத்துமல்லி விதைகளைப் போட்டிருக்கிறேன்..


இது என் முதல் முயற்சி..அம்மா வீட்டில் செடிகள் வளர்த்த அனுபவம் கொஞ்சம் இருந்தபோதும்,நம் ஊருக்கும்,இங்கேயும் பல வித்யாசங்கள்..என்னவருக்கு வாழ்க்கையில் இதுவரை செடிகள் வளர்த்த அனுபவமே இல்லையாம். ஒரு எக்ஸ்பர்ட்டிடம் அட்வைஸ் (ப்ரீ அட்வைஸ்தான்.. :) ) கேட்டு நானாக இதைத் தொடங்கியிருக்கிறேன். இதனைப் படிக்கும் நண்பர்கள்/நண்பிகள் தங்களுக்குத் தெரிந்த டிப்ஸ்-ஐத் தாரளமாக சொல்லுங்க..

அவ்வப்பொழுது என் வீட்டுத் தோட்டத்தில் என்னென்ன வளர்ந்திருக்கு என்று பகிர்ந்துகொள்கிறேன். (அதாவது கான்ஸ்டன்ட்டா அப்பப்ப மொக்கை போடுவேன் என்று எச்சரிக்கிறேன். :) )

Wednesday, May 19, 2010

பாதாம் பிஸ்கட்


தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர்(அ) மைதா மாவு - 1 கப்(120 கிராம்)
சர்க்கரை - 1 /4 கப் (~~ 35 கிராம்)
ஏலக்காய்-2
ஸ்லைஸ்ட் ஆல்மண்ட்-1 /4 கப் (~~35 கிராம்)
(உப்பில்லாத)வெண்ணெய்- 3 /4 ஸ்டிக் ( ~~ 6 டேபிள்ஸ்பூன்/ 85 கிராம்)
பேக்கிங் பவுடர் - 1 /4 டீஸ்பூன்

செய்முறை
கால் கப் சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
வெண்ணெயை இரண்டு மணி நேரம் முன்பாக ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
வெண்ணெயுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து எலக்ட்ரிக் மிக்சரால் கலக்கவும்.
அத்துடன் பொடித்த சர்க்கரை+ஏலக்காய் கலவையை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை கரைந்ததும், ஒரு கப் மாவை அத்துடன் சேர்த்து விரல்களால் கலந்துகொள்ளவும்.
இறுதியாக ஆல்மண்ட் ஸ்லைஸ்களை சேர்த்து கலந்து கொள்ளவும்.
விருப்பமான வடிவத்தில் குக்கியை செய்து பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும். ட்ரேயை பத்து நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும்.
350 F ப்ரீ ஹீட் கன்வென்ஷனல் அவன்-ல் பேக் செய்யவும்..சுமார் பதினான்கு நிமிடம் கழித்து குக்கீ சீட்டை அவன்-லிருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
சுவையான ஆல்மண்ட் குக்கீ தயார்.
டீ/காபியுடன் பரிமாறலாம்..அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்!:) :) :)





குறிப்பு

ஸ்லைஸ்ட் ஆல்மண்ட் கிடைக்கவில்லை என்றால் முழு பாதாமை ஒன்றிரண்டாக பொடித்து உபயோகிக்கலாம்.
பதினான்கு நிமிடம் பேக் செய்தால் இதே போன்று வெண்மை நிற குக்கீ கிடைக்கும்..இன்னும் பொன்னிறமாய்,க்ரிஸ்ப்பாக வேண்டுமெனில் இன்னும் சிறிது (4 - 5 ) நிமிடங்கள் பேக் செய்யவும்.

Friday, May 14, 2010

பரோட்டா குருமா

பரோட்டா செய்யும்போது வெஜிடபிள் குருமாதான் வழக்கமா செய்வேன். ஆசியா அக்காவின் எம்ட்டி சால்னா ரெசிப்பி பார்த்ததுல இருந்து பரோட்டாக்கு பர்பெக்ட் மேட்ச் அதான்னு முடிவு பண்ணி,பரோட்டா செய்யும் போதெல்லாம் இந்த குருமாதான்..சூப்பரான மணத்துடன் சூப்பரா இருக்கும்..சுவையான இந்த ரெசிப்பியைப் பகிர்ந்ததுக்கு நன்றி ஆசியா அக்கா! :)
தேவையான பொருட்கள்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தக்காளி -2
புதினா - சிறிது
கறிவேப்பிலை,கொத்துமல்லி-சிறிது
தேங்காய்த் துருவல்- 5 ஸ்பூன்
முந்திரி -2
கிராம்பு -2
பட்டை- 2இன்ச் துண்டு
ஏலக்காய்-2
இஞ்சி-பூண்டு விழுது-ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 1/2ஸ்பூன்
மல்லித்தூள்-1ஸ்பூன்
சீரகத்தூள்-1/2ஸ்பூன்
சோம்புத்தூள்-1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
பட்டை,கிராம்பு,ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளி,புதினாவை பொடியாக நறுக்கவும்.
தேங்காயுடன் முந்திரி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் காயவைத்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து சிவக்க வதக்கவும்.
பட்டை-கிராம்பு-ஏலப்பொடி,இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி,புதினா,தக்காளி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
மசாலா நன்கு வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காய்-முந்திரி விழுது, தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து,

மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விடவும்.கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

கம-கம குருமா ரெடி. பரோட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை,ஆப்பம், வெறும் சாதம் இப்படி எல்லா மெயின் டிஷ் உடனும் மேட்ச் ஆகும்.

Tuesday, May 11, 2010

பேபி அனிமல்ஸ் டே


ஒரு சில வாரங்களுக்கு முன் (பழைய)வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு "ஹெரிடேஜ் சென்டர்"ல பேபி அனிமல் டே கொண்டாடினார்கள்.அந்தக் கால வீடுகள், பழைய காலத்துல விவசாயத்துக்கு உபயோகித்த கருவிகள்,மக்கள் வாழ்க்கைமுறை இப்படி எல்லா விஷயங்களும் ஹெரிடேஜ் சென்டர்ல இருக்கு.

ஒரொரு சீசனும் துவங்கும்போது இங்கே பல நிகழ்ச்சிகள் நடக்கும். இப்போ ஸ்ப்ரிங் சீசன் ஆரம்பித்திருப்பதால் இந்த பேபி அனிமல் டே..ஆடு,குதிரை,மாடு,கோழி,முயல்,கரடி இப்படி பல மிருகங்களின் குட்டிகளை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தாங்க..ரொம்ப அழகா இருந்தது.

முதல்ல நாங்க பார்த்தது ஒரு வெள்ளை கலர் ஆட்டுக்குட்டி..அதுக்கு உடம்பு சரியில்லை போல...சோகமா படுத்திருந்தது!பக்கத்துலையே அதோட பீடிங் பாட்டில்.


அம்மா குதிரைகள் & குட்டிக்குதிரைகள்

குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எல்லோரும் தைரியமா:) தொட்டுப் பார்க்கலாம் இந்த அழகழகான கன்றுக் குட்டிகளை!
செம்மறி ஆட்டுக்குட்டி ஸோ க்யூட்! இந்த அம்மாவும் குழந்தையும் பார்வையாளர்களை கண்டுக்கவே இல்ல! அவங்க பாட்டுக்கு வெயில் காய்ந்துட்டு படுத்திருந்தாங்க.

வெள்ளைப் பன்றியும்,குட்டிகளும்..

வித்யாசமான ஆடு மற்றும் குட்டிகள்..ஆட்டின் உயரமே அரையடிதான் இருந்தது.

அந்தக்கால யு.எஸ்.கிச்சன். பக்கத்துல இன்னொரு வீட்டு கிச்சன்ல குக்கீஸ் எல்லாம் Bake பண்ணிட்டு இருந்தாங்க..டேஸ்ட்டி குக்கீஸ்-ஐ சுவைத்துக்கொண்டே அந்தக்கால கன்வென்ஷனல் அவன் மற்றும் அவர்கள் வசித்த அறைகளைப் பார்த்தோம்.

முயல் குட்டிகள்..பெரீய்ய கியூல பொறுமையா நின்னு பார்க்க டைம் இல்லை..வெளியில் நின்றே க்ளிக்கியது..

இந்த குட்டீஸ் அழகா இருக்காங்களா..அவங்க கைல இருக்க கோழிக்குஞ்சு அழகா இருக்கா?

அட்ராக்ஷன் ஆப் தி டே, யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க்ல இருந்து வந்திருக்கும் இந்த கரடிக்குட்டிகள்..துரதிர்ஷ்ட வசமா,எங்க கேமராலே பேட்டரி ட்ரெய்ன் ஆகிவிட்டதால் இந்த ஒரே ஒரு போட்டோதான் எடுக்க முடிந்தது.

டெடி பேர் பொம்மைங்க மாதிரியே அழகா, அந்த ட்ரெய்னர்ஸ் கூட பிரெண்ட்லியா விளையாடிகிட்டு இருந்தது. ஜனவரில பிறந்த இந்த குட்டிகளை மூணு மாதத்துல அம்மாகிட்ட இருந்து பிரித்துடறாங்க...இப்போவே பிரித்தால்தான் மனிதர்களுடன் அவற்றை பழக்க முடியுமாம்,வளர்ந்துட்டா மனிதர்களை நெருங்க விடாதாம்!

யு.எஸ்.ல எந்த ஒரு பிக்னிக் ஸ்பாட் போனாலும் அங்கே இந்தியர்கள் நிறையப் பேரை பார்க்க முடியும்..ஆனா இந்த ஊர்ல நம்ம மக்கள் கொஞ்சம் குறைவு..அந்த சனிக்கிழமை அங்கே இருந்த கும்பல்ல நாங்க ரெண்டு பேர் மட்டுமே இந்தியர்கள். நிறைய பேர் குழந்தைங்களை கூட்டிட்டு வந்திருந்தாங்க. ஒரு வித்யாசமான அழகான அனுபவமா இருந்தது பேபி அனிமல்ஸ் டே! [ஊருக்கு பேசும்போது, ஆட்டுக்குட்டி,கன்னுக்குட்டிய பார்க்க ரெண்டுமணி நேரம் டிரைவ் பண்ணிப் போனோம்னு சொன்னா, அம்மா சிரிக்கிறாங்க! :) ]

LinkWithin

Related Posts with Thumbnails